ஐ.நா. தீர்மானம் எப்படி அமையவேண்டும் என ஆராய இருக்கின்றோம்! – மதியம் மாவையின் பேச்சு இது

“ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் முன்வைத்த தீர்மானம் தொடர்பில் நாங்கள் மகிழ்ச்சியடைவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதிலிருந்து இலங்கை அரசு வெளியேறாத வகையில், அதன் வாக்குறுதிகளை குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றக் கூடியதாக, தீர்மானம் எப்படி அமையவேண்டும் என்பது பற்றி நாங்கள் ஆராய இருக்கின்றோம்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா நேற்று மதியம் தெரிவித்தார்.

இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் கால அவகாசம் வழங்கக் கூடாது என்று தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் வலியுறுத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்கு ரெலோ அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் மாத்திரம் கூட்டத்தில் பங்கேற்றிருந்தன.

கூட்டம் முடிவடைந்த பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அங்கு வந்தார். ரெலோ அமைப்புடன் மாத்திரம் பேச்சு நடத்தினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:-

“இலங்கை தொடர்பில் கடந்த காலங்களில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை உரிய வகையில் இலங்கை அரசு நடைமுறைப்படுத்தவில்லை.

இலங்கைக்கு 2017ஆம் ஆண்டு 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அது எங்களின் தீர்மானம் அல்ல. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் தீர்மானம்.

அவ்வாறு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைகின்றது. இந்தநிலையில் பிரிட்டன் மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கி தீர்மான வரைவை முன்வைத்துள்ளது.

அந்தத் தீர்மானம் தொடர்பில் நாங்கள் மகிழ்சியடையவில்லை. தமிழ் மக்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.

இலங்கை அரசு ஒரு பக்கம், ஐ.நா. தீர்மானத்திலிருந்து வெளியேற நினைக்கின்றது. அதனையும் அனுமதிக்க முடியாது. கால அவகாசமும் வழங்க முடியாது.

இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்காமல், தீர்மானங்களை எப்படி நிறைவேற்ற முடியும் என்பது தொடர்பில், எங்கள் தொடர்பான தீர்மானம் எப்படி அமையவேண்டும் என்பது தொடர்பில் நாங்கள் ஆராய இருக்கின்றோம்” – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *