சிவராத்திரியை முன்னிட்டு மத்திய, ஊவா பாடசாலைகளுக்கு விடுமுறை இல்லையா?
சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு 5 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும், இந்துக்கள் பெருவாரியாக வாழும் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் விடுமுறை வழங்குவதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உலகலாவிய ரீதியில் வாழும் இந்து மக்களால் மகா சிவராத்திரி நாளை (4) அனுஷ்டிக்கப்படுகின்றது. இலங்கையிலும் சிவ வழிபாட்டுடன், ஆன்மீக நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இரவோடிரவாக விழித்திருந்து – இறைவழிபாட்டில் ஈடுபடுவதால் மறுநாளை காலை 5 ஆம் திகதி வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
எனினும், மத்திய, ஊவா, மேல் மாகாணங்களில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.
மத்திய மாகாணத்திற்கு 05ஆம் திகதி பாடசாலை விடுமுறை வழங்குவது குறித்து ஏதேனும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா என மத்திய மாகாண ஆளுநர் அலுவகத்தைத் தொடர்புகொண்டு வினவினோம்.
எனினும், இதுவரை அவ்வாறான கோரிக்கைள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என்றும், அவ்வாறு உரிய தரப்பினர் கோரிக்கைகள் முன்வைக்கும் பட்சத்தில் அதனை ஆராய்ந்து, அதற்கான ஒழுங்குகளை ஆளுநர் செய்வார் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உரிய அதிகாரிகளும், சம்பந்தப்பட்ட தரப்பினரும் இதுகுறித்து நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், மத்திய, ஊவா மாகாணங்களில் கோரிக்கைகளை உரிய தரப்பினர் ஏன் கோரிக்கை முன்வைக்க வில்லையென கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.