பதுளையில் மீண்டும் ‘கிறீஸ்பேய்’ ! மக்கள் அச்சத்தில் – வடிவேல் சுரேஸ் களத்தில்!!
பதுளை, ஹாலிஎல பிரதேசத்திற்கு உட்பட்ட தோட்டங்களில் மர்ம மனிதர்கள் உலாவி வருகின்றனர் என்றும், மக்களை அச்சுறுத்தல், வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடித்தல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டுவருகின்றனர் என முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி முதல் மேற்படி சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில் தற்போது தலைவிரித்தாட தொடங்கியுள்ளது. இதனால், இரவுவேலைகளில் தோட்ட இளைஞர்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும், மக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சமும், பீதியும் இன்னும் குறையவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
தமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தோட்ட மக்கள், பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸிடம் முறையிட்டனர். இதையடுத்து இவ்விவகாரத்தை அவர் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இதன்படி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களை இன்று நேரில் சென்றுபார்வையிட்ட வடிவேல் சுரேஸிடம்,
” இது முன்னர்போல் கிரிஸ்பேயாகக்கூட இருக்கலாம். எனவே, பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.” என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சரும் உத்தரவாதமளித்தார்.