ஐ.தே.க. அரசு ஆட்சி புரியும்வரை மோசடியாளர் தண்டிக்கப்படார்! – மைத்திரி காட்டம்
ஐக்கிய தேசியக் கட்சி அரசு இருக்கும்வரை பிணைமுறி மோசடியாளர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
61ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு தேசிய கணக்காளர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் இடம்பெற்ற பெரும் நிதி மோசடிச் சம்பவமான மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு ஊடாக அதன் குற்றவாளிகள் யாரென நாட்டுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ஐ.தே.க. அரசு இருக்கும் வரை அவர்கள் தண்டிக்கப்பட வாய்ப்பில்லை. அதுமாத்திரமின்றி இந்த அரசு இருக்கும்வரை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் நாட்டுக்கு அழைத்து வரப்படுவதும் சாத்தியமற்றது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி ஊடாக அரசு தம்மீது கொலன்னாவ குப்பை மேட்டைவிட அதிகமான குப்பையைப் போட்டுக்கொண்டுள்ளது” – என்றார்.