புதிய அரசமைப்பு உருவாக்கம்: உக்கிப்போன முயற்சியை தோண்டுவதில் பயனில்லை! – மஹிந்த தெரிவிப்பு
“புதிய அரசமைப்பு உருவாக்கம், உக்கிப்போன முயற்சி. அதனை மீண்டும் தோண்டுவதில் எந்தப் பயனுமில்லை. இதன் காரணமாகவே சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.”
– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை. இது தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“புதிய நாடாளுமன்றமே அரசமைப்புக்கான அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிக்கவேண்டும். ஆட்டம் காணும் இந்த அரசால் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க முடியாது. இதனாலேயே இதில் பங்கேற்கவில்லை” – என்றார்.