பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசு நத்தை வேகம்! – அமெரிக்கா கடும் அதிருப்தி
பொறுப்புக்கூறல் விவகாரத்தில், இலங்கை அரசு வேகமாகச் செயற்படவில்லை என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
“பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கை அரசின் நகர்வுகள் மிகவும் மெதுவானதாகவே உள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையிலும், கடந்த காலத்தில் இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட்டதன் அடிப்படையில் தொடர்ந்தும் அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கடந்த அமர்வின் பிரேரணையில் உள்ள காரணிகள், இலக்குகளைப் பொறுப்புடன் அடைதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், உண்மைகளைக் கண்டறிதல் பொறிமுறை மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை கையாள வேண்டியது அவசியமானதாகும்.
இந்நிலையில், அந்த இலக்குகளை அடைவதற்கு இலங்கை அரசு அதிக கவனம் எடுக்கவேண்டும் என்பதுடன், அதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.