எல்லையில் போர்ப் பதற்றம்! எதுவும் திடீரென நடக்கலாம்!! – இந்தியா எச்சரிக்கை
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக முப்படைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பாகிஸ்தானுக்குள் புகுந்து எப்படி அமெரிக்கா ஒசாமா பின்லேடனை கொன்றதோ அதேபோன்றுதான் இந்தியாவும் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளை அழித்துள்ளது என மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலை அடுத்து இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் விமானப்படை விமானம் இந்தியாவுக்குள் நுழைந்து ரஜோரி செக்டாரில் இந்திய இராணுவ நிலையின் மீது குண்டை வீசியுள்ளது.
இதன் பின்னர் பாகிஸ்தான் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது எனக் கூறப்படுகின்றது.
அதேவேளை, தமது எல்லைக்குள் அத்துமீறி வந்த இரண்டு இந்தியப் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது.
இருதரப்பு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் எல்லையையொட்டிய மாநிலங்களில் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாகிஸ்தானும் அனைத்து விமான நிலையங்களில் விமானச் சேவையை நிறுத்திவிட்டது.
பாகிஸ்தான் அடாவடியாக போர் போன்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதால், இன்று எதுவும் நடக்கலாம் என இந்திய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
“பின்லேடன் விவகாரத்தில் அமெரிக்கா என்ன செய்ததோ அதேபோன்ற நடவடிக்கையைத்தான் இந்தியா மேற்கொண்டுள்ளது. எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.