பனிக்கன்குளத்தில் கோர விபத்து! ஒருவர் பலி; 5 பேர் காயம்!!
மாங்குளம், பனிக்கன்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயங்களுக்குள்ளாகினர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பயணிகள் சொகுசு பஸ், வீதியில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ் நடத்துநரான பருத்தித்துறையைச் சேர்ந்த செல்வராசா நகுலேஸ்வரன் என்பரே உயிரிழந்தார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் ஏ – 9 வீதியில் ரயர் மாற்றுவதற்காக வீதியில் தரித்து நின்ற டிப்பர் வாகனத்துடன் மோதியுள்ளது. டிப்பருடன் மோதிய பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிப் பற்றைக் காட்டுக்குள் புகுந்தது. பஸ்ஸின் நடத்துநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பயணிகள் ஐவர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
நேற்று இடம்பெற்ற இந்த விபத்துத் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அதேவேளை, அதிக வேகத்தாலும், அவதானமின்மையாலுமே விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று பஸ்ஸில் பயணித்த பயணிகள் விசனம் தெரிவித்தனர்.