நீதி, பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்க முனைகிறது இலங்கை! – ரணிலின் கருத்துக்கு நவநீதம்பிள்ளை தக்க பதிலடி
இலங்கை அரச தலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை அளித்து விட்டு, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரியிருப்பது குறித்து முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:-
“ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்த விவாதத்துக்கு முன்னர், அரசின் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை அளித்துள்ளது.
30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு இலங்கை அரசு இன்னும் தாமதிக்கும் தந்திரத்தைக் கையாளுகின்றது.
தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவைப் போன்று, இலங்கையில் போரின்போது நடந்த குற்றங்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி, மன்னித்து மறந்து விட வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செய்தியில், மிக முக்கியமான வாக்குறுதிகளான நீதி மற்றும் பொறுப்புக்கூறலைக் காணவில்லை.
போருக்குப் பின்னர் நீதி, மற்றும் பொறுப்புக்கூறலுக்கு நடவடிக்கை எடுப்பதாக இலங்கை அரசு கூறியிருந்தது,
ஆனால், அதற்குப் பதிலாக, உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு மாத்திரம் அமைச்சரவையிடம் அனுமதி கோரியிருப்பது அந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதைப் போல் தோன்றுகின்றது.
தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய தவறாக அர்த்தப்படுத்துகின்றனர்.
இது முற்றிலும் சரியான முறை என்று அர்த்தமில்லை. அந்தச் சூழலுக்கு அது பொருத்தமானதாக இருந்தது.
இலங்கையில் நடந்த பாரிய படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், கொடூரமான குற்றங்களுடன் தென்னாபிரிக்காவை ஒப்பிட முடியாது” – என்று குறிப்பிட்டுள்ளார்.