மைத்திரிபாலவை மறைமுகமாக பிரபாகரனுடன் ஒப்பிட்ட ரணில்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மறைமுகமாக ஒப்பிட்டுப் பேசியுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
திருகோணமலைக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரசமைப்புப் பேரவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருகின்றார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“19ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து ஜனநாயகத்தை நிலைநாட்டினோம். சுயாதீனக் குழுக்களை உருவாக்கினோம். தங்களுடைய சுய அரசியல் இலாபத்துக்காக அதனை விமர்சிக்கின்றனர்.
2015ஆம் ஆண்டு நாட்டை இருண்ட யுகத்திலிருந்து மீட்டெடுத்தோம். அதனைக் குலைக்க இப்போது பலர் கிளம்பியுள்ளார்கள்.
நான் 19ஆவது திருத்தச் சட்டத்தையும், அதன் ஊடாக உருவாக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களையும் கலைக்கத் தயாராக இருக்கின்றேன். அப்படிச் செய்தால் நாட்டில் என்ன நடக்கும் என்று எண்ணிப் பாருங்கள். வடக்கில் பிரபாகரன் ஆயுதத்தை வைத்து என்ன செய்தாரோ அதுவே நாட்டில் நடக்கும். எங்களுக்கு சிங்களப் பிரபாகரனுடன் இணைந்து பணியாற்றவேண்டிய அவசியமில்லை” – என்று குறிப்பிட்டுள்ளார்.