கடைகளை மூடி ஒத்துழையுங்கள்! – விக்கி கோரிக்கை
“வடக்கு மாகாணத்தில் நாளை நடைபெறவுள்ள பூரண ஹார்த்தால் போராட்டத்துக்கு வடக்கு வர்த்தகர்கள் தங்கள் கடைகளை மூடி ஒருமித்து ஆதரவு வழங்கவேண்டும்.”
– இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“கிளிநொச்சியில் எமது மக்கள் தமது ஒருங்கிணைந்த கருத்துக்களை நாளை வெளிக்காட்டும் போது உங்களுடைய கடைகளையும் வியாபார நிலையங்களையும் மூடி வைத்து உங்கள் அக்கறையையும் எங்களோடு இணைந்த உங்கள் ஒருங்கிணைந்த சிந்தனையையும் வெளிக்காட்டுமாறு உங்களிடம் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். உங்கள் நிறுவனங்களை மூடுவதால் உங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, வணிகத் தளர்ச்சி போன்றவற்றையும் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் நாம் அறியாதவர்கள் அல்ல. எனினும், எம் தமிழர்களின் விடிவை நோக்கிய எமது பயணத்தில் இந்தக் காலமானது மிக முக்கியமானதொன்று” – என்று குறிப்பிட்டுள்ளார்.