‘கொக்கெய்ன்’ விசாரணை அறிக்கை திங்கள் பிரதமரிடம் கையளிப்பு!
‘கொக்கெய்ன் போதைப்பொருள்’ விவகாரம் குறித்த விசாரணை அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எதிர்வரும் திங்கட்கிழமை (25) கையளிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ‘கொக்கெய்ன்’ போதைப்பொருள் பயன்படுத்துகின்றனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்தானது தெற்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, வெறுமனே தகவலை வெளியிட்டால் மட்டும்போதாது, பெயர்ப்பட்டியலையும் அவர் உடன் வெளியிடவேண்டும் என பல தரப்புகளும் வலியுறுத்திவருகின்றன.
இந்நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐக்கிய தேசியக்கட்சியால் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.
சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியல்ல தலைமையிலான இந்தக்குழுவில், எரான் விக்கிரமரத்ன, ஆசுமாரசிங்க, நிஷங்க நாணயக்கார ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
குறித்த குழுவின் முன்னிலையில் நேற்று ( 22) ஆஜராகி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வாக்குமூலமளித்திருந்தார். இதனை அடிப்படையாகக்கொண்டே விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு, அது கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ளது.