மனோவின் கட்சியில் புதிய பதவி நியமனங்கள்! – குருசாமி செயலாளர் நாயகம்; பிரகாஷ் கணேசன் தேசிய அமைப்பாளர்; பரணி பிரசார செயலாளர்
ஜனநாயக மக்களை முன்னணியின் செயலாளர் நாயகமாக மேல் மாகாண சபை உறுப்பினர் கே.ரி.குருசாமியும், தேசிய அமைப்பாளராக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பிரகாஷ் கணேசனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.
கொழும்பில் கட்சித் தலைவர் மனோ கணேசன் தலைமையில் நேற்றுக் கூடிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழுக் கூட்டத்தில் கட்சியின் புதிய பதவி மாற்றங்களும், நியமனங்களும் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டன.
கட்சித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன். கட்சி பிரதி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார், உப தலைவர் மாநகர சபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா ஆகியோர் உட்பட கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தின்போது மேலும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,
கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி கட்சியில் செயலாளர் நாயகம் எனும் புதிய பதவி உருவாக்கப்படும் யோசனையை கட்சியின் யாப்பு திருத்தமாக தலைவர் மனோ கணேசன் முன்மொழிய அதை பிரதித் தலைவர் வேலுகுமார் வழிமொழிந்தார்.
இதையடுத்து பின்வருவோர் உரிய பதவிகளுக்காக முன்மொழியப்பட அவற்றை அரசியல் குழு உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.
1. செயலாளர் நாயகம்: கே.ரி. குருசாமி
2. தவிசாளர்: ஜெயபாலன் பொன்னுசாமி
3. பொருளாளர்: கணேசன் கந்தசாமி
4. தேசிய அமைப்பாளர்: பிரகாஷ் கணேசன்
5. அமைப்பு செயலாளர் (வட கிழக்கு): ஜனகன் விநாயகமூர்த்தி
6. அமைப்பு செயலாளர் (தென்னிலங்கை): சண் பிரபாகரன்
7. பிரசார செயலாளர்: பரணி முருகேசு
8. கொழும்பு மாவட்ட அமைப்பாளர்: பாலசுரேஷ் குமார் மருதப்பன்
9. ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்க பொதுச்செயலாளர்: மூக்கன் சந்திரகுமார்