குறைவான வளங்கள், நிறைவான சேவை! திகாவின் அமைச்சை பாராட்டுகிறார் திலகர்!

தேசிய வீடமைப்பு அமைச்சால் முன்னெடுக்கும் வீடமைப்புத் திட்டங்களுக்கு நிகராக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு அமைச்சு மலையகத்தில் வீடமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியீட்டத்தில் டிக்கோயா தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட இருபது தனிவீடுகளைக் கொண்ட ‘தங்கவேல்புரம்’ பொதுமக்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஶ்ரீதரன், ஆர்.ராஜாராம், எம்.ராம் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இன்று நாட்டில் வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுக்கும் மூன்று அமைச்சுகள் உள்ளன. தேசிய வீடமைப்பு விடயங்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச வினாலும் வடக்கு, கிழக்கு மாகாண வீடமைப்பு நேரடியாக பிரதமர் தலைமையிலும் இடம்பெறும் போது அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் வீடமைப்புத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

எனினும் ஏனைய இரண்டு அமைச்சுகளைவிட மலையக வீடமைப்புக்கான வளங்களும் நிறுவன அமைப்புகளும் குறைவாகும். பெருந்தோட்ட மனிதவள அபிவித்தி நிறுவனத்தினூடாகவே முழு கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனினும் தேசிய வீடமைப்பு அமைச்சுக்கு நிகராக மலையக வீடமைப்புத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இன்று அம்பாறையில் 20 வீடுகளைக் கொண்ட புதிய கிராமம் ஒன்றை அமைச்சர் சஜித் பிரேமதாச திறந்து வைக்கும் அதேநாளில் நாம் டிக்கோயாவில் 20 வீடுகளையும் ஆனைத்தோட்டத்தில் 10 வீடுகளையும் தலவாக்கலையில் 20 வீடுகளையும் கொண்ட மூன்று கிராமங்களை மக்களிடம் கையளிக்கின்றோம்.

தொழிலாளர் தேசிய சங்கம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு மூத்த தலைவர்களின் இறப்புகளோடு வீழ்ச்சியடைந்து காணப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அந்த நாட்களில் அதன் ஸதாபகத் தலைவரான வி.கே.வெள்ளையன்  அடக்கம் செய்யப்பட்டுள்ள டிக்கோயா தோட்ட மக்களே அவரது ஆன்மாவாக தொழிலாளர் தேசிய சங்கத்தை கட்டிக்காத்து வந்தனர்.

அப்போதைய தோட்டக் கமிட்டி தலைவர் தங்கவேல் முழு ஆளுமையுடைய தலைவராக அதனை மேற்கொண்டு வந்தார். அவ்வாறு கட்டிக் காத்ததன் காரணமாகத்தான் இளையவர்கள் நாங்கள் பொறுப்பேற்று நடாத்த முடிகின்றது.

அத்தகைய தலைவரை நினைவு கூரும் முகமாகவே “ தங்கவேல்புரம்” என இந்த வீடமைப்புத் திட்டத்துக்கு பெயரிட்டுள்ளோம். வி.கே.வெள்ளையன் கல்லறையை பாதுகாத்துவரும் டிக்கோயா தோட்ட மக்களுக்கு செய்யும் கைமாறாகவும் இதனைக் கொள்ள முடியும் .

இன்று வீடுகளைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகளுக்கு விட்டுத் திறப்புகளை வழங்கி வைப்பதில் இந்த பிரதேச பாடசாலையான ஶ்ரீவாணி வித்தியாலயத்தின் அதிபரும், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளரான க.மெய்யநாதனும் கூட பங்கு கொண்டார்கள்.

மலையக கல்விச் சமூகம் மலையக அபிவிருத்தி பணிகளை தற்போது அவதானிக்கத் தொடங்கியு ள்ளது. மலையக அதிகார சபையை உருவாக்கி நாம் மலையக கல்வியாளர்களையும் அதில் உள்வாங்கியுள்ளோம். இந்த அரசியல். பயணத்தில் அனைவரும் ஒன்றிணைந்து தற்போதைய முன்னேற்றப் பாதையை விரிவுபடுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *