வவுனியாவில் இ.போ.ச. ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போர்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் வவுனியா சாலையின் 21 ஊழியர்களுக்கு அண்மையில் வழங்கிய, முறைகேடான பதவி உயர்வை இரத்துச் செய்யக்கோரி, இ.போ.ச. வவுனியா சாலை ஊழியர்கள் 15 பேர், சாலைக்கு முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இ.போ.ச. வவுனியா சாலை ஊழியர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

வவுனியா சாலையின் 21ஊழியர்களுக்கு, கடந்த சனிக்கிழமை பதவி உயர்வு வழங்கப்பட்டது. இப் பதவி உயர்வானது, எவ்வித தகுதி தராதம் பாராது, அரசியல் ரீதியில் முறைகேடான வகையில் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 20 , 25 வருடங்களாக பணிபுரியும் எவரும் உள்வாக்கப்படவில்லை. அதேவேளை, நாளாந்தம் 750 ரூபா ஊதியம் பெறும் ஊழியர்கள் நிரந்தர நியமனத்தில் உள்வாங்கப்படவுமில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பதவி உயர்வு, ஜக்கிய தேசியக் கட்சி தொழிற்சங்கத்தைச் சார்ந்தே வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர்கள், பதவி உயர்வு வழங்குவதாகத் தெரிவித்து மேலும் சிலரை தொழிற்சங்கத்தில் இணைத்துக் கொண்டிருக்கின்றனர் எனக் குறிப்பிட்டனர்.

முறைகேடாக வழங்கப்பட்ட பதவி உயர்வை இரத்துச் செய்து, நேர்முகப் பரீட்சை நடத்தி பதவி உயர்வு வழங்கப்படுமாயின், அதனை ஏற்றுக்கொள்வோம். இல்லையேல் 14 நாட்களின் பின்னர் சாகும்வரை உண்ணாவிரத்தில் ஈடுபடவுள்ளோம் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *