யாழில் ஊடகவியலாளரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது!

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியை பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

யாழ். கொக்குவில், கருவேப்புலம் வீதியில் வீடொன்றின் மீது ஆவாக் குழுவினரால் நேற்று பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைக்கு சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஊடகவியலாளர் பொலிஸாருடன் சமரசம் செய்ய விரும்பவில்லை. அத்துடன் குறித்த தாக்குதலை மேற்கொண்ட பொலிஸாரை கைதுசெய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“குறித்த பொலிஸ் அதிகாரி கடுமையான தொனியில் என்னை அச்சுறுத்தியுள்ளார். இந்நிலையில், எதிர்காலத்தில் நான் இதேபோல் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும்” என்று தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் தெரிவித்ததையடுத்து யாழ். பொலிஸார் குறித்த பொலிஸ் அதிகாரியைக் கைதுசெய்துள்ளனர்.

குணரத்தின என்ற பொலிஸ் அதிகாரியே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *