போர்க்குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்கமாட்டோம்! – வாசுதேவ திட்டவட்டம்
போர்க்குற்றங்கள் இடம்பெற்றன எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சோசலிச மக்கள் முன்னணியினர் நேற்றுக் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“இராணுவ வீரர்களால் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதனை எமது நாட்டுச் சட்டத்தின் பிரகாரம் விசாரணை மேற்கொள்ளலாம்.
ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் இடம்பெறும்போது தமிழ் அரசியல்வாதிகள் எமது இராணுவத்துக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பார்கள். பேரவை முடிந்தவுடன் அது தொடர்பில் வாய் திறக்கமாட்டார்கள்.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற தேவை இவர்களுக்கு இல்லை. வெறுமனே அரசியல் நோக்கத்திலே இவர்கள் செயற்படுகின்றனர்” – என்று கூறியுள்ளார்.