மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இங்கு இடமே இல்லை! – ரணிலின் உரைக்கு சுரேஷ் பதிலடி
“இனப்படுகொலையை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை. அதற்கு தமிழ் மக்களும் தயாராக இல்லை. ஆகவே, போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு உண்மைகள் கண்டறியப்படுகின்றமையுடன் தமிழ் மக்களுக்கு நீதி, நியாயமும் கிடைக்க வேண்டும்.”
– இவ்வாறு தெரிவித்துள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.
“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய “மறப்போம், மன்னிப்போம்” என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்மைப்பினரும் ஏற்றுக்கொண்டு வரவேற்பதானது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் வெறுக்கத்தக்க செயல் என்பதுடன் தமிழ் மக்களின் மனங்களை நோகடிக்கக் கூடிய செயற்பாடும் ஆகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“தமிழ் மக்களுக்கான எல்லாவற்றையும் கைவிட்டிருக்கின்ற கூட்டமைப்பினர் தற்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருப்பது போன்று போர்க்குற்றங்களையும் கைவிட்டு, விசாரணைகளையும் கைவிட்டு, மறப்போம், மன்னிப்போம் என்ற நிலைமைக்கு வந்திருப்பதானது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.