போர்க்குற்றச்சாட்டுக்குப் பொறுப்புக்கூறாது தப்பிப்பதற்கு முயற்சிக்கிறது இலங்கை அரசு! – ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா காட்டம்

“உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்கம் என்ற பொறிமுறையை உருவாக்கும் சட்டவரைவை யாழ்ப்பாணம் வர முன்னர் கடந்த 12 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தார். இந்தப் பொறிமுறையைப் பின்பற்றி தென்னாபிரிக்கா போன்று இங்கும் பொறுப்புக்கூறாது தப்பிக்கக் கூடிய நிலை உள்ளது. இதுவே அவர் மறப்போம் மன்னிப்போம் எனக் கூறியதற்கு முக்கிய காரணம்.”

– இவ்வாறு தெரிவித்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் சட்டத்துறை செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா.

ஆயுதம் இல்லாத போராட்டம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட வாலிப முன்னணி மாநாடு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் பிருந்தாபன் தலைமையில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“லக்‌ஷ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முதலாவது எதிரியாகக் குற்றம் சட்டப்பட்டுள்ளவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன், இரண்டாவது எதிரியாக பொட்டம்மான், மூன்றாவதாக சாள்ஸ், நான்காவதாக மணிமேகலை, ஐந்தாவதாகவே சிறையில் உள்ள எனது கட்சிக்காரர் உள்ளார்.

அப்படியானால் அரச தரப்புகள் கூறுவதுபோல முக்கியமான எதிரிகள் எங்கே? அவர்கள் இல்லை. அவர்கள் இறந்துவிட்டார்கள் என அரசு கூறுகின்றது. அது வேறு விடயம்.

இங்கு நாம் இந்த விடயத்தில் முக்கியமாக அவதானிக்கவேண்டும். மஹிந்த, கோட்டா, சரத் பொன்சேகா போன்றவர்கள் மீதான கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் பிரதான சந்தேகநபர்கள் அல்லர். எனவே, அவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்பதில் நியாயம் இருக்கின்றது.

ஆனால், போர்க்குற்றம் சாட்டப்படும் தரப்பில் உள்ளவர்கள் யார்? அனைவரும் பிரதான சந்தேகநபர்களாக இருப்பதுடன் அவர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றார்கள்.

11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் நான் திருகோணமலையில் ஒரு சித்திரவதை முகாம் உள்ளதை வெளிக் கொண்டு வந்தேன். அதேபோல முல்லைத்தீவில் கோட்டாபயவின் இரகசிய முகாம் இருப்பதை வெளியில் கொண்டு வந்தோம். இந்தச் சம்பவங்களுடன் படைத் தளபதிகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை வெளி உலகுக்கு கொண்டு வந்தோம்.

போர்க்குற்றம் என்பது போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயம். ஆனால், சாதாரணமாகப் பொதுச் சட்டத்தின் கீழ் படுகொலை செய்தவர்களில் ஒருவருக்கு பீல்ட் மார்ஷல் பதவி. இன்னொருவர் பிணையில் வெளியில் சுதந்திரமாக உள்ளார்.

மக்கள் இந்த வேற்றுமைகளைப் பிரித்துப் பார்க்கவேண்டும். பத்து வருடங்களின் பின்னர் மறப்போம் மன்னிப்போம் என ரணிலும், இராணுவம் குற்றம் புரிந்துள்ளதாக மஹிந்தவும் கூறுகின்றனர். இதனை நாம் ஆழமாக ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

ரணில் மறப்போம் மன்னிப்போம் எனக் கூறியதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், உண்மையைக் கண்டறிதல் மற்றும் நல்லிணக்கம் என்ற பொறிமுறையை உருவாக்கும் சட்டவரைவை யாழ்ப்பாணம் வர முன்னர் கடந்த 12 ஆம் திகதி அவர் அமைச்சரவைக்குப் பாரம் கொடுத்துள்ளார்.

அதன்போது தென்னாபிரிக்க நாட்டில் இருந்ததைப்போல இதனை அமைக்கின்றோம். அதன்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தால் அவர்களை விடுதலை செய்வார்கள். இதனை நாம் எதிர்பார்க்கவில்லை.

உண்மை தெரியவேண்டும், என்ன நடந்தது என முழுமையாக அறிய வேண்டும். பிரதான சந்தேகநபர்களாக இல்லாது சிறிய உதவிகள் செய்த நபர்கள் பலர் நீண்டகாலமாகச் சிறையில் தடுக்க வைக்கப்பட்டுள்ளனர்.

ரணிலும் மஹிந்தவும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு அவர்களை விட்டுவிடலாம் என்ற அடிப்படையிலாவது எரிந்து கொண்டிருக்கின்ற தீயை அணைக்கலாம் என நினைக்கின்றனர்.

ஆனால், தென்னாபிரிக்காவில் உண்மையைக் கண்டறிதல் ஆணைக்குழு தோல்வி அடைந்தது. 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். அதனை விசாரிக்க குழுக்கள் அமைக்கப்பட்டு 2 ஆயிரம் தடவைகள் விசாரணைகள் இடம்பெற்றன. இறுதியில் அது தோல்வி அடைந்தது.

அதற்கு முக்கிய காரணம், அதில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தர வந்திருந்த சிலருடன் சேர்த்து இரகசியமாக ஏனைய பலரையும் விடுதலை செய்யுமாறு அந்த நாட்டு ஜனாதிபதி வேலை பார்த்தார். பின் கதவாலும் ஜனாதிபதி விடுதலை செய்தார். இத்தகைய நிலை இங்கும் நடக்கலாம்.

தென்னாபிரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களது குறைகள் கேட்கப்படவில்லை. அவர்களுக்குத் தீர்வும் வழங்கப்படவில்லை. இதனால் அங்கு 2008ஆம் ஆண்டு மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்பாகத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதற்கு எதிராக 2010ஆம் ஆண்டு அரச தரப்பால் அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் பங்களிப்பு இன்றி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியல் அமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

வெளியாகியுள்ள புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் மூன்று மொழி பிரதிகளையும் வாசித்து இருந்தால் அதில் சமஷ்டித் தன்மை இருக்கின்றது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். அதில் இறைமை பிரிக்கக்கப்பட முடியாது எனக் கூறப்பட்டுள்ளது. அதை நாம் தெளிவாக – ஆழமாகப் பார்த்தால் இறைமை பகிரப்பட முடியும் என்பதே அர்த்தம். அதனால்தான் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.

இணைந்த வடக்கு – கிழக்கில் சமஷ்டித் தீர்வு இல்லையென்றாலும் அதில் ஒற்றையாட்சி, சமஷ்டி இரண்டும் இணைந்த கலப்பு முறையான சமஷ்டி உள்ளது. அது வரும் வராது என விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது. தற்போதைய சூழலில் ஆயுதம் இல்லாத போராட்டமே நடக்கின்றது. இளைஞர்கள் இவற்றை ஆழமாகப் பார்க்கவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *