மாகந்துர மதூஷின் கொடூரக் கொலைத் திட்டம் அம்பலம்! டுபாயில் நடப்பது என்ன?
மாகந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்கள் கைது இடம்பெற்ற பின்னர் இங்கு சிறைகளில் இருக்கும் அவரது சகாக்கள் மிகுந்த கவலையுடன் சாப்பிடாமல் கொள்ளாமல் இருப்பது ஒருப்பம், மறுபுறம் அப்படியான முக்கியஸ்தர்களை சந்திக்க அடிக்கடி சிறைக்கு வரும் முக்கியஸ்தர்கள் கூட இப்போது சிறைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். பொலிஸ் கண்ணில் படாமல் இருக்கவே இந்த ஏற்பாடு என கூறப்படுகின்றது.
மதுஷ் விவகாரத்தில் என்ன நடக்கிறது?
அமைச்சர்கள் பலர் சிக்கியுள்ளதையும் அவர்களின் போதைப்பொருள் வர்த்தக தொடர்புகள் குறித்தும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
மாக்கந்துர மதுஷ் அவரது ஊரில் வாசனா என்று அழைக்கப்படுவார். சகாக்கள் அவருக்கு வைத்த பெயர் லொக்கு ஐயா ( பெரியண்ணன்..)
லொக்கு ஐயா மதுஷ் – ஜனாதிபதி மைத்திரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதில் வசமாக சிக்கியுள்ளார்.
மதுஷின் சகா மதுஷான் என்பவர் துப்பாக்கி சுடுவதில் வல்லவர் என்பதால் இந்த கொலைச்சதிமுயற்சிக்கு அவரை தேர்ந்தெடுத்த மதுஷ் மட்டக்களப்பில் வைத்து இந்த மேட்டரை செய்யுமாறு கேட்டுள்ளார்.
இதற்காக மட்டக்களப்பில் வீடு ஒன்று குத்தகைக்கு பெறப்பட்டுள்ளது. அதற்கான காசை மதுஷிடமிருந்து பெற்று மதுஷானுக்கு வழங்கியவர் அஹுங்கல்லே புத்தி என்பவரே. புத்தியும் இப்போது டுபாயில் மதுஸுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மதுஷான் கடந்த வருடம் மே – ஜூன் கால எல்லைக்குள் மட்டக்களப்பில் இருந்து 80 துப்பாக்கிகளை அஹங்கல்லவுக்கு கொண்டுவந்துள்ளார்.அதில் பத்து ஆயுதங்கள் கஞ்சிப்பான இம்ரானின் சகாக்களுக்கு கொடுத்துவிட்டு மிகுதியை புதைத்துவிட்டாரென கூறப்படுகின்றது.
அதேபோல இம்மாதம் சிறைச்சாலை பஸ் ஒன்றை தாக்கி முக்கிய நபர்களை கொல்வதற்கு போட்டிருந்த திட்டமும் வெளியாகியுள்ளது.
இப்போது சிறையில் உள்ள டீ ஐ ஜி நாலக்க சில்வா கடந்த வருடம் ஸ்னைப்பர் துப்பாக்கி மற்றும் எல் எம் ஜி துப்பாக்கிகள் இரண்டை ஆயுத களஞ்சியத்தில் இருந்து பெற்றமை ஏன் என்பது பற்றியும் ஆராயப்படுகிறது.
விசேட தாக்குதல் பிரிவொன்றை அவர் அமைக்க முயன்றது ஏன் என்பது பற்றியும் தேடப்படுகிறது.
ட்ரோன் கெமரா ஒன்று நாலக்க சில்வாவிடம் இருந்து மீட்கப்பட்டதை விசாரித்த பொலிஸ் அது ஏன் என்று வினவியபோது அது கண்டி திகன வன்முறை சம்பவத்தை படமாக்க பயன்படுத்தப்பட்டதென நாலக்கவால் பதில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதனை தேடியதில் ஜனாதிபதியின் அரசியல் கூட்டங்கள் தொடர்பான விடியோக்களே இருந்துள்ளன. அப்படியானால் இதன் பின்னணி என்ன ? இந்த கமராவை டுபாயில் இருந்து அனுப்பியது யார் என்பது பற்றி விசாரிக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதி கொலைச்சதி திட்டத்தை வெளிப்படுத்திய நாமல் குமாரவை ஒரு தடவை அணுகிய டீ ஐ ஜி நாலக்க – வேறு ஒரு பெயரில் பேஸ்புக் கணக்கை ஆரம்பித்து படையினரை கடுமையாக விமர்சிக்குமாறு கூறியிருந்தார் என்று செய்திகள் வெளிவந்தனவே.
இந்த சம்பவத்தை அரங்கேற்ற முன்னரும் பின்னரும் – படையினரின் பலவீனமே இதற்கு காரணமென ஒரு கருத்தை உருவாக்குவதே இந்த திட்டத்தின் சூட்சுமம் என பொலிஸார் விசாரணைகளில் அறிந்துள்ளனர் என சொல்லப்படுகிறது.
மதுஷின் மறுபக்கம் !
மாக்கந்துர மதுஷின் உண்மையான ஊர் கம்புறுப்பிட்டி.. அவரின் முதல் மனைவியே மாக்கந்துரவை சேர்ந்தவர். அவர் மதுஷை விட்டு பிரிந்தே வாழ்கிறார்.
வெளியில் கெட்டவனாக வாழ்ந்தாலும் ஊரில் மதுஷின் பெயருக்கு பெரும் ஆதரவு உள்ளது. அங்கு விசாரணைகளுக்கு சென்ற பொலிஸாரிடம் அனைவரும் மதுஷுக்கு ஆதரவாகவே பேசியுள்ளனர்.
அரச படைகளால் தாய் படுகொலை – தந்தையின் உடனடி மறுமணம் – வறுமை காரணமாக போராடிய மதுஷ் தனது தம்பியை பொலிஸார் கொன்றதும் சமூக விரோதியாக மாறியுள்ளார். பொய் வழக்குகள் அவர்மீது போடப்பட்டமையும் இந்த நிலைமைக்கு ஒரு காரணமென அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சாதாரணதரம் வரை கல்வி பயின்ற மதுஷ் அறநெறி பாடசாலைக்கு சென்றதே இல்லையென அவரது சிறிய தாயார் தெரிவித்துள்ளார்.கஷ்டப்பட்டு வளர்த்த காரணத்தினால் தான் தனது பாட்டியின் மரணத்திற்கு (2015) கடும் பாதுகாப்புடன் வந்து சென்றிருக்கிறார் மதுஷ்.
இன்னுமொரு தகவல்..!
டுபாயில் மதுஷுடன் கைதானவர்களில் பலர் கைகள் இரண்டையும் தலைக்குப் பின்னால் கட்டியபடி இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம் என்ன என்று உயர்மட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர் ஒருவரிடம் கேட்டேன்…
“ ஓ அதுவா… அவர்கள் அனைவரும் முஸ்லிம்கள்.
கைது செய்யப்பட்ட கையோடு அவர்கள் அனைவரும் தக்பீர் செய்து தாங்கள் மதப் பண்புகளை கடைப்பிடிக்கும் இஸ்லாமியர்கள் என்று காட்ட முயன்றுள்ளனர்.
ஆனால் அது எடுபடவில்லை .விசாரணை முடிந்த பின்னர் பார்த்துக்கொள்வோம் என்று கூறிவிட்டது டுபாய் பொலிஸ்.. அப்போது எடுக்கப்பட்ட படமே அது. மற்றும்படி வேறு காரணங்கள் இல்லை..”
ஆர். சிவராஜா