அரசியல் தீர்வு விடயத்தில் நேர்மையுடன் கூட்டமைப்பு! – கூறுகின்றார் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக நேர்மையாகச் செயற்பட்டு வருகின்றது என இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அத்தோடு கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக விசேட கவனம் செலுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளூர் அபிவிருத்திச் செயற்றிட்டம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சி பேதங்களுக்கு அப்பால் எமது பகுதிகளைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற உயரிய நோக்குடன் செயற்பட வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 144 வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைக்கும் வகையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் 238 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உலக வங்கி ஊடாக 100 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதுடன், அதன் மூலம் கிராமங்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்யும் வகையில் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.