தீர்வு காண்பதில் அரசு உறுதி! குழப்புகின்றது மஹிந்த அணி!! – யாழில் பிரதமர் ரணில் குற்றச்சாட்டு

“மஹிந்த அரசால் உருவாக்கப்பட்ட அரசியல் தீர்வு முன்மொழிவின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. அதனையே மஹிந்த தரப்பினர் இப்போது விமர்சித்து வருகின்றனர்.”

– இவ்வாறு யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது எனவும், வடக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“புதிய அரசமைப்பு மூலம் தேசிய பிரச்சினைக்குத் தீர்வுகாண முற்படுகையில் மஹிந்த அணியினர் நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாகப் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களைத் திசை திருப்பி வருகின்றனர்.

அதிகாரங்களைப் பகிர்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை.

இந்நிலையில், மஹிந்த அணியினர் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டைப் பிளவுபடுத்துவதென்றால், அதற்கு வழிவகுப்பவர்கள் மஹிந்த தரப்பினரே.

அரசியலில் வங்குரோத்து நிலையை அடைந்துள்ள அந்த அணியினர் நாம் மக்களுக்குப் பெற்றுக்கொடுத்து வரும் ஜனநாயகத்துக்கும், சுதந்திரத்துக்கும் எதிராகச் செயற்பட்டு வருகின்றனர்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *