முருகன் – நளினி உடல்நிலை மோசம்! – சிறை வைத்தியசாலையில் சேர்ப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள முருகன் – நளினி ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறைச்சாலையில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என இந்திய உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் பல மாதங்களாகியும் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முருகன் கடந்த 2ஆம் திகதியிலிருந்து உணவைத் தவிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதேபோன்று பெண்கள் சிறையில் இருக்கும் நளினியும் கடந்த 9ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
சிறைத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தியும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வருகின்ற நிலையில் இருவரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் சிறையில் உள்ள வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், முருகன், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, சிறைகண்காணிப்பாளர் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில் தான் சிறையிலேயே இறந்துவிட்டால், தனது உடலை அரச வைத்தியசாலைக்குத் தானம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்