மாக்கந்துர மதுஷ் குழுவினருடன் மஹிந்த அணிக்கு நேரடித் தொடர்பு! – விரைவில் பெயர்கள் அம்பலமாகும் என்று அரசு அதிரடி அறிவிப்பு
“டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் வர்த்தகர் – பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாக்கந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களுடன் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நேரடித் தொடர்புகளை வைத்துள்ளார்கள். அவர்களின் பெயர் விவரங்கள் விரைவில் அம்பலமாகும்.”
– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, ராஜித சேனாரத்ன ஆகியோர் அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டில் போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலகக் குழுவினரின் அட்டகாசங்களும் என்றுமில்லாத வகையில் தலைதூக்க மஹிந்த அணியினரே காரணம்.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுவினருடன் மஹிந்த அணியினர் நேரடி உறவை வைத்துள்ளார்கள்.
மஹிந்த அணியில் உள்ள சண்டியர்கள் அனைவரும் போதைப்பொருள் வர்த்தகத்துக்குப் பெயர் போனவர்களாக உள்ளனர்.
இவர்கள்தான் அண்மையில் நாடாளுமன்றத்தில் சொத்துக்களை சேதப்படுத்தினர்; சபாநாயகரையும் பிரதமரையும் கொலைசெய்ய முயன்றனர்.
பாதுகாப்பு அமைச்சையும் சட்டம், ஒழுங்கு அமைச்சையும் தம் வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி அமைதியாக இருந்தாலும் இவர்களுக்கு எதிராக நீதித்துறையின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்போம்” – என்றனர்.