மருதானையில் விபத்துக்குள்ளான காரிலிருந்து 68 கிலோ கஞ்சா மீட்பு!
கொழும்பு, மருதானை ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான காரிலிருந்து கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காரிலிருந்து 68 கிலோ கிராம் கேரளாக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (14) அதிகாலை 3.30 மணி தொடக்கம் 4 மணி வரையான காலப்பகுதியில் குறித்த கார் மேம்பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்குப் பொலிஸார் சென்றபோது, காரில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் – பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இவ்வாறு தப்பிச்சென்றுள்ள சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கு சம்பவ இடத்தில் காணப்படும் சி.சி.ரி.வி. கமராக்களை சோதனை இடவுள்ளதாக அவர் கூறினார்.
அதேநேரம், இந்தச் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.