மட்டக்களப்பில் பாடசாலையில் கஞ்சா வியாபாரம் நடத்திய மாணவன் கைது!
மட்டக்களப்பில் 16 வயது பாடசாலை மாணவன் ஒருவர் கஞ்சாவுடன் பாடசாலை ஒன்றின் முன்னாள் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ஒரு மில்லி கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது என மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து நேற்றுப் பிற்பகல் 2 மணியளவில் குறித்த மாணவனை அவர்கள் கைதுசெய்துள்ளனர்.
மாமாங்க பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் இந்த வருடம் டிசம்பர் மாதம் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளார் எனவும், அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரிடம் இருந்து கஞ்சாவைப் பெற்று பாடசாலையில் கல்வி கற்றுவரும் தனது நண்பர்களுக்கு வியாபாரம் செய்து வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கஞ்சா பாவித்து வருகின்றனர் எனவும், அவ்வாறே நேற்றும் கஞ்சாவை பாடசாலைக்கு எடுத்து வந்துள்ளார் எனவும் பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.