யாழில் பட்டப்பகலில் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்! – எரிந்து நாசமாகியது ‘ஹையஸ்’
யாழ். நல்லூர் நாயன்மார்கட்டு, நாயன்மார் வீதியில் உள்ள வீடொன்றின் மீது பட்டப்பகலில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த 6 பேர் கொண்ட குழுவினர் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹையஸ் வாகனம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
வீட்டில் இருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களும், வீட்டுக் கண்ணாடிகளும் உடைத்து நொருக்கப்பட்டுள்ளன.
வீட்டின் கேற் பூட்டப்பட்டிருந்த போதும், மதிலால் வீட்டுக்குள் ஏறிப் பாய்ந்து உள்சென்ற குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெற்றோல் குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறான தாக்குதல்களின் மூலம் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்ற போதிலும், இந்தச் சம்பவங்கள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளோ அல்லது பொலிஸாரின் தலையீடோ இல்லை எனவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.