தாயும், மகளும் பலி ! நைவல பூங்காவுக்கு பூட்டு!!
மினுவாங்கொடை – நைவல, தனியார் களியாட்டப் பூங்கா ஒன்றில் உள்ள ராட்டினம் ஊஞ்சல்) ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில், தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு பேரையும், நாளை 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இடம்பெற்ற இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 47 வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்திருந்ததுடன், பலத்த காயங்களுடன் மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, இச் சம்பவம் தொடர்பில் குறித்த நைவல பூங்காவின் உரிமையாளர் உட்பட 6 பேரை, வெயாங்கொடைப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை, அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியிருந்த நிலையில், இவர்களை 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
மினுவாங்கொடையிலுள்ள இந்தக் களியாட்டப் பூங்காவில் ஊஞ்சல் உடைந்து வீழ்ந்ததில், மினுவாங்கொடை கொட்டுகொடையைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவியும், இவரது தாயாருமே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த தாய், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் 4 ஆம் திகதியன்றும், மாணவி கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 5 ஆம் திகதியன்றும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த களியாட்டப் பூங்கா, தற்போது தற்காலிகமாக காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )