ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொய்யுரைக்கின்றார் கோட்டா! – குமார வெல்கம காட்டம்
தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பொய்யுரைக்கின்றார் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவை நிறுத்தத் தீர்மானித்துள்ளதாக மஹிந்த ராஜபக்ச எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.
ஆனால், கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை நிறுத்துவதற்கு மஹிந்த தீர்மானித்துள்ளார் என்றும், அதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்றும் பொய்யுரைத்து வருகின்றார்.
இவ்வாறு மஹிந்தவின் மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வருவதற்கு அவர்களது சகோதரர்கள் முயலும் செயற்பாடுகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.
கோட்டாபய வெளிப்படுத்தும் கருத்துக்கும் எங்களது கட்சிக்கும் எந்ததொரு தொடர்பும் இல்லை” – என்றார்.