மைத்திரி, கோட்டா கொலைச் சதி: இரு வாரங்களில் அதிர்ச்சித் தகவல்!

“என்னையும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டாபய ராஜபக்சவையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகள் தொடர்பான முழுமையான அதிர்ச்சித் தகவல்கள் இரு வாரங்களில் அம்பலமாகும்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற குற்றவாளிகளை ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“என்னிடமே பாதுகாப்பு அமைச்சு இருப்பதனால் என்னையும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோட்டாபய ராஜபக்சவையும் படுகொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிகள் தொடர்பாக என்னிடமே கேட்டறிந்து கொள்ளுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இங்கு குறிப்பிட்டார்.

இந்தப் படுகொலைச் சூழ்ச்சிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் முறையாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர்தான் என்னிடம் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இப்படுகொலை சூழ்ச்சிகள் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் இன்னும் இரு வாரங்களில் அம்பலமாகும். அப்போது நாட்டு மக்கள் பல விடயங்களை அறிந்துகொள்ள முடியும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *