சர்வாதிகாரிகளை ஆதரிப்பதாக அமெரிக்காவைச் சாடும் ஈரான்!
அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளில் சர்வாதிகாரிகளையும், தீவிரவாதிகளையும் ஆதரிப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆற்றிய உரையில், ”ஈராக்கில் அமெரிக்க இராணுவத் தளம் இருப்பது அவசியம். அப்போதுதான் ஈரானின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியும். ஈரான் மிகவும் ஆபத்தான நாடு” என்றார்.
இதற்கு தற்போது ஈரான் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமத் ஜாவத் சாரிப் தனது டுவிட்டர் பக்கத்தில்,
”மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா சர்வாதிகாரிகளையும், தீவிரவாதிகளையும் ஆதரிக்கின்றது. அமெரிக்காவை ஆதரிக்கும் அவர்கள்தான் நமது பிராந்தியத்தை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.