ஶ்ரீபாத கல்வியற் கல்லூரியில் முறைகேடுகள் ! அறிக்கை கிடைத்ததும் நடவடிக்கை – கல்வி அமைச்சு உறுதி!
பத்தனை, ஶ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரி அலுவலகத்துக்குள் பதிவாளர் உட்பட மேலும் சில அதிகாரிகள் குடித்து கும்மாலமடித்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
” கல்வி அமைச்சு அதிகாரிகளின் விசாரணை அறிக்கை கிடைத்தகையோடு நடவடிக்கை எடுக்கப்படும்.” என கல்வி அமைச்சர் தன்னிடம் உறுதியளித்தார் என விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இன்று ( 06) தெரிவித்தார்.
ஸ்ரீ பாத கல்வியற் கல்லூரிக்கு இன்று ( 06) மாலை கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்ட அமைச்சர் இராதாகிருஸ்ணன், ஆசிரியர் பயிலுநர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.
சமையலறை அசுத்தமாக காணப்படுகின்றமை உடபட தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அமைச்சரிடம் மாணவர்கள் எடுத்துரைத்தனர்.
அத்துடன், கல்லுரி அலுவலகத்துக்குள் நேற்று இரவு ( 05ழு ஒரு சில அதிகாரிகளும் சிற்றூளியர்களும் முறையற்ற விதத்தில் நடந்து தொண்டது குறித்தும் முறையிட்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட அமைச்சர்,
” பத்தனை ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரியின் சமையல் கூடம் (05.02.2019) அன்று கொட்டகலை சுகாதார அதிகாரிகளால் தற்காலிகமாக சுகாதார சீர்கேடு நிலவுவதாக கூறி மூடப்பட்டுள்ளது.
இது சரியான ஒரு விடயமாகவே நான் கருதுகின்றேன். அதனை தொடர்ந்து அந்த பகுதியை உடனடியாக சுத்தம் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. அது வரை தற்காலிகமாக சமையல் அறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சமையல் அறை பகுதியை திருத்தி அமைப்பது தொடர்பாக நான் கல்வி அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்து அவர்கள் அதனை திருத்தி அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தொலைபேசி மூலமாக என்னிடம் தெரிவித்தனர்.
அதே வேளை ஹாஸ்டல் வசதிகள் மிகவும் மோசமாகவுள்ளதை காணமுடிகின்றது. இதனையும் திருத்தி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஒரு சில அபிவிருத்தி வேலைகள் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்படவில்லை.
எனவே எதிர்காலத்தில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கின்ற பொழுது முன்னுரிமை அடிப்படையில் அவற்றை முன்னெடுப்பதற்கு 7 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் விரிவுரையாளர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ரீ பாத கல்வியல் கல்லூரியின் சுற்றுச் சூழலும் மிகவும் மோசமாக இருக்கின்றது. இதனை அபிவிருத்தி செய்வதற்கு இந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே இதனை முறையாக செய்வதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான ஒரு விடயமாகும்.” என்று அமைச்சர் கூறினார்.
க.கிசாந்தன்