‘கூட்டு ஒப்பந்தம்’ – முத்தரப்பு சந்திப்பு ஒத்திவைப்பு!

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் ‘சம்பள உயர்வு’ தொடர்பில் இன்று (05) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த  முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை (06) அல்லது நாளை மறுதினமே (07)  மேற்படி சந்திப்பு நடைபெறும் என தெரியவருகின்றது.

முதலாளிமார் சம்மேளனத்தின் உயர்மட்ட உறுப்பினர் ஒருவர், வெளிநாடு சென்றிருப்பதாலேயே சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது என அறியமுடிந்தாலும், உண்மையான காரணம் இன்னும் உத்தியோகப்பூர்வமாக வெளிவரவில்லை.

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் உட்பட இதர நலன்புரி விடயங்களை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தம் கடந்த 28 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் – அலரிமாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

இதன்படி அடிப்படை நாட்சம்பளமாக 700 ரூபாவும், விலைக்கான கொடுப்பனவாக 50 ரூபாவும் என மொத்தமாக  750 ரூபா வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

குறித்த தொகையைஏற்க மறுத்த தமிழ் முற்போக்கு கூட்டணி, அலரிமாளிகையில் வைத்து அதுவும் பிரதமர் முன்னிலையில் கள்ள ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதற்கு போர்க்கொடி தூக்கியதுடன், கடந்த முதலாம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் சந்தித்து அதிருப்தியை வெளியிட்டது.

அதேவேளை, பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுவோம் என்றும் கூட்டணி உறுப்பினர்கள் பகிரங்கமாக அறிவித்தனர்.

இதையடுத்து கூட்டுஒப்பந்தத்தை வர்த்தமானியில் வெளியிடாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் கூறினார்.

பெருந்தோட்டக் கம்பனிகளுடன் 5 ஆம் திகதி பேச்சு நடத்துமாறும், அரசாங்க தரப்பிலிருந்து பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவும், தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர ஆகியோரும் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டனர்.

குறித்த முத்தரப்பு சந்திப்பு இன்று 5 ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *