ஐ.தே.கவின் யோசனைக்கு சுதந்திர தினத்தில் ஆப்பு வைத்தார் ஜனாதிபதி!
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அரசமைக்கும் யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, சுபபோகங்களை அனுபவிப்பதே இதன் நோக்கம் என்றும் விமர்சித்தார்.
தேசிய தினநாளில் (04) நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய உரையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் உரையின் சுருக்கம் வருமாறு,
பெப்ரவரி 04 நாம் சுதந்திரமடைந்த நாள். வெளிநாட்டு அழுத்தங்கள் அன்று போல் இன்றும் வேறு வடிவத்தில் வந்துள்ளன.
* சுதந்திரத்தின் பின்னர் இதுவரை ஒரு அரசியல் ரீதியான தீர்வு மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு சரியான தீர்வை காண முடியாமல் இருப்பது ஒரு பின்னடைவே. இந்த நூற்றாண்டுக்கேற்ப நாம் எமது பொருளாதார யுக்திகளை வகுக்க வேண்டும்.
* 2015 நாம் அமைத்த தேசிய அரசு செய்ய வேண்டியதை செய்யவில்லை.செய்யக் கூடாததை செய்தது. மக்களின் தேவை நிறைவேற்றப்படவில்லை.பாராளுமன்றம் இன்று கேலிப்பொருளாகியுள்ளது. துரதிஷ்ட சம்பவங்கள் நடக்கும் இடமாக அது மாறியுள்ளமை கவலைக்குரியது.
* இனப்பிரச்சினைக்கு தீர்வு பற்றி பல தலைவர்கள் பேசினர் . ஆனால் பொருளாதார முன்னேற்றம் பற்றி யாரும் கவனிக்கவில்லை. இரண்டுமே வெற்றியடையவில்லை.
* மாகாண சபைத் தேர்தல் ஒன்றரை வருட காலம் நடத்தப்படாமல் இருப்பது ஜனநாயகம் இல்லை. இதை பற்றி அரச சார்பற்ற நிறுவனங்கள் ஏதும் பேசாதது ஏன் ?
* தேசிய அரசை அமைக்க பேசப்படுகிறது.அது தேவைதானா? நான் ஊடகங்களில் அதை கண்டேன்.அதனை நான் நிராகரிக்கிறேன்.ஒரு எம் பியை சேர்த்து தேசிய அரசு அமைப்பது சரிதானா?
* போதைப்பொருள் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியுள்ளது..
* ஊழலை – மோசடியை – பாதாள உலக கோஷ்டியை ஒழிக்க நாம் திடசங்கற்பம் பூணுவோம்.
* தகைமை அடிப்படையில் அரச சேவை முன்னெடுக்கப்பட வேண்டும்.” என்றார்.