சாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் பலி!
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்.நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோதுண்டே இளைஞர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நுணாவில் மேற்கைச் சேர்ந்த விக்னா (வயது – 24) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார் என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மோட்டார் திருத்தும் கடையில் தனது மோட்டார் சைக்கிளைத் திருத்தக் கொடுத்திருந்த அவர், அதனைப் பார்வையிட நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பயணித்து கடவையைக் கடந்தபோதே விபத்து நேர்ந்துள்ளது.
அவர் படுகாயடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, இந்த ரயில் கடவையில் தடுப்புத் துலா அமைக்கப்படாமல் இருப்பதுடன் பொருத்தப்பட்டுள்ள சமிக்ஞை விளக்கு சீராக இயங்கவில்லை எனவும் பொதுமக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.