மஹிந்தவும் கோட்டாவுமே பிரகீத்தைக் கடத்தினார்கள்! – ஐ.தே.கவுக்கு ஆதரவளித்ததும் காரணம் என்கிறார் சந்தியா

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்குக் காரணம் என அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

பிரகீத்தைக் கடத்தியவர்கள் மஹிந்தவும், கோட்டாவுமே என்பதை எந்த இடத்திலும், எந்தத் தருணத்திலும் நான் உறுதியாக கூறுவேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஞானசாரரின் விடுதலை குறித்து தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி சந்தியா நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்குக் கடிதமொன்றைக் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுதந்திர தினத்தில் ஞானசாரரை, ஜனாதிபதி விடுவிக்கவுள்ளார் என ஊடகங்களில் பரவலாகச்
செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாகச் சட்டமா அதிபர், ஜனாதிபதி, புத்தசாசன அமைச்சர் ஆகியோருக்கு நான் அறிவித்திருந்தேன்.

பிரகீத் வழக்கில் சாட்சியாளர் மட்டுமின்றிப் பாதிக்கப்பட்டவரும் நானே. சாட்சியாளர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையின் கீழ் எனக்கு இதுபற்றித் தெளிவுபடுத்த வேண்டும்.

அது தொடர்பாக ஜனாதிபதிக்குக் கடிதமொன்றைக் கையளித்துள்ளேன். அதன் பிரதிகளை நீதி அமைச்சு, சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்குக் கையளித்துள்ளேன்.

பிரகீத்தைக் கிரிதலவுக்குக் கடத்திச் சென்று அப்போது ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சரத் பொன்சேகாவுடனான தொடர்பு என்னவென்று வினவியுள்ளனர்.

தேர்தல் பிரசாரம் தொடர்பாக வினவியுள்ளனர். இதனடிப்படையில் மஹிந்த மற்றும் கோட்டா ஆகியோரே பிரகீத்தைக் கடத்தியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் அவரது கடத்தலுக்கு ஒரு காரணம். இதனால், தமக்கு ஆதரவான ஊடகவியலாளர்களைப் பயன்படுத்திப் போலியான செய்திகளை பரப்பவேண்டாம் என மஹிந்த மற்றும் கோட்டாவைத் தாழ்மையுடன் கோருகிறேன்.

பிரகீத்தைக் கடத்தியவர்கள் மஹிந்தவும், கோட்டாவுமே என்பதை எந்த இடத்திலும், எந்தத் தருணத்திலும் நான் உறுதியாகக் கூறுவேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *