அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கையால் பல கொள்கலன்கள் தேங்கியுள்ளன.
ஏனைய நாட்களில் நாளாந்தம் 2 ஆயிரம் கொள்கலன்கள் சோதனைக்குட்படுத் தப்படுகின்ற போதிலும், தற்போது அந்த பரிசோதனை நடவடிக்கைகள் 100 கொள்கலன்களில் மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.
சுங்க பணிப்பாளர் நாயகமாக செயற்பட்ட P.S.M. சார்ள்ஸை நிதி அமைச்சின் வருமான கண்காணிப்பு பிரிவிற்கு மாற்றி, கடற்படையின் ஓய்வுபெற்ற ரியல் அட்மிரல் ஷமல் பெர்னாண்டோவை நியமிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி அமைச்சர் அண்மையில் சமர்ப்பித்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டப்படி வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையை சுங்க அதிகாரிகள் கடந்த புதன்கிழமை (30) முதல் ஆரம்பித்தனர்.
பணிப்பாளர் நாயகம் பதவிக்கு ஒருவரை நியமிப்பது அமைச்சரவையின் செயற்பாடு என நிதி அமைச்சு கூறுகின்றது.
இதன் காரணமாக சேவைக்கு மீண்டும் திரும்புமாறு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனினும், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என அலுவலக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவன்பிட்டிய குறிப்பிட்டார்.
அத்துடன், கொள்கலன்கள் தேங்கியிருப்பதால் அத்தியாவசியப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.