பொலிஸாருக்கே ‘தண்ணி’ காட்டிய கடத்தல்காரர்கள்!
கஞ்சா கடத்தல் சந்தேகநபர் ஒருவர் ஊடாக மற்றொரு கஞ்சா வியாபாரிக்கு அழைப்பு ஏற்படுத்தி அவரை மடக்கச் சென்ற பொலிஸார் மரத்தூளை மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெருந்தொகையில் கஞ்சா மீட்கப்படுகின்றது. முக்கிய புள்ளிகளும் சந்தேகத்தில் கைதாகின்றனர். பொலிஸாருக்கு கிடைக்கும் இரகசியத் தகவலையடுத்தே இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் கஞ்சா கடத்தல் தொடர்பில் இரகசியத் தகவல் பொலிஸாருக்கு நேற்றுமுன்தினம் கிடைத்துள்ளது. கஞ்சா கடத்தல் சந்தேக நபர் ஊடாக கஞ்சா வியாபரியை ஓரிடத்துக்குப் பொலிஸார் அழைத்துள்ளனர்.
கஞ்சா வாங்குபவர்கள் போன்று பொலிஸார் சென்றுள்ளனர். கஞ்சா மாதிரியை வியாபாரி காண்பித்துள்ளார்.
அது கஞ்சா என்று உறுதிப்படுத்திய பொலிஸார் அவரிடமிருந்து 20 கிலோ பொதியை மீட்டுள்ளனர்.
அதில் மரத்தூளே இருந்துள்ளது. இருப்பினும் அவரைக் கைதுசெய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.