தேசிய அரசு அடுத்தவாரம் உதயம்! தீவிரமாக ஆராய்கிறது ஐ.தே.க.!! – கைகொடுக்கிறது மு.கா.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கம் ஒன்று அடுத்த வாரமளவில் உருவாக்கப்படும் சாத்தியம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு விருப்பம் தெரிவித்து, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக திசநாயக்கவுக்கு, ஐக்கிய தேசியக் கட்சி நேற்று கடிதம் அனுப்பியுள்ளது.
நல்லாட்சி அரசுக்கான கொள்கைகளுடன், பல்வேறு கட்சிகளைக் கொண்ட தேசிய அரசாங்கம் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கவிருப்பதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு விரும்பும் எந்தக் கட்சிக்கும், ஐதேக இடமளிக்கத் தயாராக இருப்பதாக, ஐதேகவின் தலைவர்களில் ஒருவரான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இணையும் கட்சிகள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக இருக்கின்றது. மரசின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.
எனவே, முஸ்லிம் காங்கிரஸையும், சு.கவின் குழுவொன்றையும் இணைத்து தேசிய அரசாங்கம் அமைக்க ஐ.தே.க. நடவடிக்கை எடுக்ககூடும்.
தேசிய அரசாங்கம் அமையும் பட்சத்தில், நாடாளுமன்றத்தின் அனுமதியோடு அமைச்சுகளின் எண்ணிக்கையை அதிகரித்துகொள்ள முடியும்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைவதன்மூலம் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் ஏற்பாடு சட்டத்தில் உள்ளது. எனவே, ஒரு கட்சியின் ஆதரவுடன் அதை செய்யலாமா என்பது குறித்தும் ஐ.தே.க. தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது.