கோப்பாயில் பொலிஸ் பதிவு; அச்சமடைந்துள்ளனர் மக்கள்! – கண்டிக்கின்றார் சுரேஷ்

“யாழ்.கோப்பாய் பொலிஸார் மக்களின் வீடுகளுக்குச் சென்று ஒரு படிவத்தை வழங்கிக் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர் என எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. வடக்கில் அமைதியான நிலை காணப்படும் நிலையில் இவ்வாறு தகவல்களைப் பொலிஸார் சேகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.”

– இவ்வாறு தெரிவித்தார் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைப் பொலிஸார் திரட்டி வருகின்றமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாகக் கோப்பாய் பொலிஸார் வீடுகளுக்கு சென்று ஒரு படிவத்தை வழங்கிக் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர் என எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.

வடக்கில் அமைதியான நிலை காணப்படும் நிலையில் இவ்வாறு தகவல்களைப் பொலிஸார் சேகரிப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இதேபோன்று கொழும்பில் வெள்ளவத்தை, தெஹிவளைப் பகுதிகளிலும் வீடுகளில் உள்ளோரின் தகவல்களைப் பொலிஸார் சேகரித்தபோது அதற்கு அமைச்சர் மனோ கணேசன் எதிர்ப்பு தெரிவித்து பொலிஸார் தகவல்களை சேகரிப்பதை நிறுத்த வேண்டும் எனக் கோரியதை அடுத்து அந்தச் செயற்பாடு நிறுத்தப்பட்டது.

இவ்வாறிருக்கையில் வடக் கில் இப்போது ஏன் இந்த நடவ டிக்கை மேற்கொள்ளப்படுகின்றது? இதற்கான தேவை என்ன? என்றும் கேள்வி எழுகின்றது.

ஆகவே, வீடுகளில் பொலிஸார் தகவல்களைக் கோருவதற்கான காரணங்களைப் பொலிஸ் உயர் அதிகாரிகள் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். அதனூடாகவே மக்கள் மத்தியில் தற்போதுள்ள அச்சநிலைமையைப் போக்க முடியும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *