புதிய அரசமைப்பு ஒருபோதும் வராது! – அடித்துக் கூறினார் அமைச்சர் மனோ
“புதிய அரசமைப்பு ஒருபோதுமே வராது. அது நடக்காது. அதற்கான காலம் கடந்துவிட்டது.”
– இவ்வாறு அடித்துக் கூறினார் அமைச்சரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன்.
“நான் மக்களிடம் உண்மையைச் சொல்லவே விரும்புகின்றேன். அவர்களை ஏமாற்ற விரும்பவில்லை. புதிய அரசமைப்பு வரவேவராது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் மனோ கணேசன் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி, இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியலயம் ஆகியன இணைந்து நடத்திய மெய்வன்மைப் போட்டியில் பிரதம விருந்தினராகப் பங்கேற்றார்.
இதன் பின்னர் ‘காலைக்கதிர்’ பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசமைப்பு வரவேண்டும் என்ற உறுதிப்பாட்டில் நான் எப்போதுமே இருக்கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனைப் போன்று இந்த அரசமைப்பு வரவேண்டும் என்ற உறுதிப்பாடு என்னிடம் இருக்கின்றது.
ஆனாலும், நான் மக்களிடம் உண்மையைச் செல்ல விரும்புகின்றேன். வழிகாட்டல் குழுவுக்குள் இருக்கும் சூழல் நன்றாக இல்லை.
ஆகவே, இந்த அரசமைப்பு வர வாய்ப்பில்லை என்று இரு வருடங்களுக்கு முன்பே சொன்னேன். ஆனால், அதனை யாரும் கேட்கவில்லை.
நான் அன்று சொன்னது இன்று சரியாக இருக்கின்றது” – என்றார்.