ஜனாதிபதி வேட்பாளர் தெரிவால் ராஜபக்சக்கள் இடையே மோதல்! – ஐ.தே.க. கூறுகின்றது
ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விவகாரத்தில் ராஜபக்சக்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் மனோ கணேசன் தமது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்குக் கருத்து வெளியிடும்போதே அமைச்சர் நவீன் திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் புதிதாகப் பதிவு செய்து கொண்ட 17 இலட்சம் வாக்காளர்களும் தீர்க்கமான பங்கை வகிப்பார்கள்.
எனவே, சுத்தமான வேட்பாளர் ஒருவரை விரும்பும் இந்த வாக்காளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி பேசவேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும். ஐ.தே.க. இப்போது மிகவும் பலமாக உள்ளது. பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராகவே உள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் ராஜபக்சவினர் மத்தியில் ஒற்றுமை இல்லை. குமார வெல்கம போன்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் கோட்டபாய ராஜபக்சவை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை” – என்றார்.