நான் ரெடி; நீங்கள் ரெடியா? – ரணிலைப் பார்த்துக் கேட்டாராம் கோட்டா
“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க நான் தயாராகவே உள்ளேன். நீங்கள் தயாரா?”
– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேரில் பார்த்துக் கேட்டுள்ளார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டாபய ராஜபக்ச.
முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்சவின் திருமண நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரதமர் ரணில் கலந்துகொண்டார். அவரை ராஜபக்ச குடும்பத்தினர் இருகரம் கூப்பி வரவேற்று மகிழ்வுடன் அளவளாவிய ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்திருந்தன. அதில் ரணிலும் ராஜபக்ச சகோதர்களின் ஒருவரான கோட்டாபாயவும் நெருங்கி நின்று உரையாடும் படமும் வெளிவந்திருந்தது.
இருவரும் என்ன பேசினார்கள் என்று ரோஹித ராஜபக்சவின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் சிரித்தவாறு பதிலளித்துள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க நான் தயாராகவே உள்ளேன். நீங்கள் தயாரா? என்று பிரதமரிடம் கோட்டாபய கேட்டுள்ளாராம்.
ராஜபக்ச குடும்பத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர்தான் களமிறங்கக் போகின்றார் போல் தெரிகின்றது.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை நாம் உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்று அமைச்சர் மங்கள கூறியுள்ளார்.