‘மன்னிப்பு கேட்கமாட்டேன்’ – சபரிமலை கனகதுர்கா திட்டவட்டம்!
சபரிமலை கோயிலுக்குள் சென்று ஐயப்பனை தரிசித்ததால் தனது குடும்பத்தினரால் கைவிடப்பட்ட கனகதுர்கா, நீதிமன்ற உத்தரவுடன் தனது வீட்டிற்கு மீண்டும் செல்வதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
“சபரிமலை கோயிலுக்குள் சென்றதற்காக இந்து அமைப்புகளிடமோ அல்லது எனது குடும்பத்தினருடமோ நான் ஒருபோதும் மன்னிப்புக் கேட்கமாட்டேன்.
நான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியே நடந்ததுடன், யாருக்கும் அநீதி இழைக்கவில்லை. எனது வீட்டிற்கு திரும்ப செல்வதற்கு சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வேன்” என்று பிபிசியிடம் பேசிய கனகதுர்கா தெரிவித்துள்ளார்.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைவதற்கு கணவர் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், கனகதுர்கா தற்போது ஒரு தற்காலிக அரசாங்க தங்குமிடத்தில் தங்கியுள்ளார்.