வடக்கு, கிழக்கு மக்களுக்கு இவ்வாண்டு 17,000 வீடுகள்! பிரதமர் – கூட்டமைப்பு பேச்சில் இணக்கம்!!
வடக்கு – கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 2019ஆம் ஆண்டின் இறுதிக்குள் 17 ஆயிரம் வீடுகளைக் கட்டி ஒப்படைக்கத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அவரது செயலாளர் மற்றும் ஆலோசகர் ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான பேச்சு மிக நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற போதிலும், இதுவரை அது சாத்தியப்படாமை குறித்து கூட்டமைப்பு, பிரதமரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
இந்தப் பேச்சுக்கு அமைய வடக்கு, கிழக்கில் 17 ஆயிரம் வீடுகளைக் கட்டி இவ்வாண்டுக்குள் மக்களிடம் ஒப்படைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.