இரு மாதங்களில் ட்ரம்ப் – கிம் ஜாங் அன் சந்திப்பு!
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப் பேசினர்.
இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டு உறவில் இணக்கமான சூழல் உருவானது. இதனிடையே மீண்டும் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப் பேச ட்ரம்ப், கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் பரஸ்பர விருப்பம் தெரிவித்தனர்.
அதன்படி இருநாட்டுத் தலைவர்கள் இடையேயான இரண்டாவது சந்திப்பு அடுத்த மாதம் (பெப்ரவரி) இறுதியில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின.
உச்சி மாநாட்டுக்கான திகதி மற்றும் இடம் தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றார்கள்.
இந்தநிலையில், அமெரிக்கா வெளிவிவகார அமைச்சர் மைக் பாம்பியோ தலைநகர் வொஷிங்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் டிரம்ப் – கிம் ஜாங் அன் இடையேயான இரண்டாவது சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது அவர், “இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு அடுத்த 2 மாதங்களில் நடக்கும்” எனத் தெரிவித்தார்.