மாலியில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல் போர்க்குற்றம்! – ஐ.நா. கண்டனம்
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா. அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு இலங்கைப் படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார்.
உள்ளூர் நேரப்படி நேற்றுக் காலை 6.30 மணியளவில் இலங்கை இராணுவ வாகனத் தொடரணி ஒன்றின் மீது கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
மாலியின் மத்திய பகுதியில் உள்ள டோன்ட்சா என்ற இடத்தில் நடந்த இந்த தாக்குதலில் கப்டன் உள்ளிட்ட இரண்டு இலங்கைப் படையினர் கொல்லப்பட்டனர்.
மேலும், ஆறு இலங்கைப் படையினர் காயமடைந்தனர் என்று ஐ.நா அறிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், இலங்கை அரசுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. அமைதிப்படையினரை இலக்கு வைக்கும் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களின்படி போர்க்குற்றங்களாகக் கருதப்படும் என்று கூறியுள்ள ஐ.நா. பொதுச்செயலர், இந்தத் தாக்குததலின் சூத்திரதாரிகளை அடையாளம் கண்டு விரைவில் நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று மாலி அதிகாரிகளைக் கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.