படை முகாம் முன் போராட்டத்தில் குதித்தனர் கேப்பாப்பிலவு மக்கள்!
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரின் பிடியில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள், இன்றிலிருந்து (26) படைமுகாம் வாயிலில் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
697 நாட்களாக, காணி மீட்புக்கான தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கேப்பாப்பிலவு மக்கள், இன்று தமது போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இந்தநிலையில், இன்று காலை பெருமளவு பொலிஸார் கேப்பாப்பிலவு இராணுவ முகாம் வாயியில் குவிக்கப்பட்டனர். வீதித்தடைகளும் போடப்பட்டன.
இராணுவ முகாமுக்கு முன்பாக, பெண்களும் குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு சமையலில் ஈடுபட்டபோது பொலிஸார் அதனைத் தடுக்க முயன்றதால் குழப்பம் ஏற்பட்டது.
இந்தப் போராட்டம் இன்று இரவும் தொடர்ந்து நீடித்து வருகின்றது. குழந்தைகளுடன் பெண்கள், இராணுவ முகாமில் இருந்து 75 மீற்றர் தூரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைப் பொலிஸார் அகற்ற முயன்றதால் அங்கு பதற்றமான நிலை காணப்படுகின்றது.