ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுக! – கோட்டாவுக்கு மஹிந்த பச்சைக்கொடி
ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயாராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியிருப்பதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
‘லங்காதீப’ வார இதழுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அமெரிக்க குடியுரிமை பிரச்சினை பெரும்பாலும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் இந்தச் செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும், அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கோட்டாபய ராஜபக்சவின் இந்தக் கருத்தை ஜனாதிபதி செயலக மூத்த அதிகாரி ஒருவர் மறுத்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, மகிந்த ராஜபக்ச ஆதரவு தரவதாக வாக்குறுதி அளித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மைத்திரிபால சிறிசேனவுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு தர மறுத்தால், அந்தக் கட்சியுடனான கூட்டணிக்கு வாய்ப்பில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் மகிந்த சமரசிங்கவும் கூறியுள்ளார்.