ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம்!
ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி வழங்கக் கோரி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
திருகோணமலையில் 2006ஆம் ஆண்டு படுகொலையான ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 13 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணத்திலுள்ள, படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபி முன்றலில் இன்று நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
யாழ். ஊடக மையத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் கிழக்கு ஊடக அமையம், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு, தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஊடகவியலாளர் அமைப்புக்கள் இணையவுள்ளன.
ஊடகப் படுகொலைக்கான நீதி கோரும் இந்தப் போராட்டத்தில் அனைவரையும் திரண்டு நீதிக்காகக் குரல் கொடுக்குமாறு ஊடக அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.